சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்

21 ஆனி 2025 சனி 11:12 | பார்வைகள் : 142
சன் டிவி நிறுவன பங்குகள் தொடர்பாக, கலாநிதி மாறன் மற்றும் ஏழு பேர் பதிலளிக்குமாறு தி.மு.க., - எம்.பி.,யும், கலாநிதியின் சகோதரருமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, 'மனிகன்ட்ரோல் டாட் காம்' செய்தி இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
சன் குழுமத்தின் பங்கு நடைமுறையை, 2003ம் ஆண்டின் அசல் ஆவணத்தின்படி மீண்டும் மாற்ற வேண்டும் என்று கூறி, கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மற்றும் ஆறு பேருக்கு, 'லா தர்மா' என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தின் சுரேஷ் என்பவர் வாயிலாக தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீஸில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
* ஒட்டுமொத்த நிறுவனம் மற்றும் சொத்துக்களை, தனிப்பட்ட ஆதாயத்துக்காக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள, மோசடி நடவடிக்கை மேற்கொண்டு, இதற்காக திட்டம் தீட்டி, ஏமாற்று வழிகளில் கலாநிதி சதி செய்துஉள்ளார்
* குடும்பத்தின் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, குறிப்பாக முரசொலி மாறன் மரணப் படுக்கையில் இருந்தபோது, 2003ல் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
* தந்தையின் மரணத்துக்குப் பின், உரிய சட்ட ஆவணங்கள் இன்றி, தாய் மல்லிகா மாறன் பெயருக்கு சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டன
* இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் சில மாதங்களுக்குப் பிறகே வெளியான நிலையில், அதற்கு முன்பே சொத்துக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன
* பின்னர் நிறுவனப் பங்குகளை கலாநிதி மாறன் பெயருக்கு மாற்றிக் கொள்ள இது உதவியாக அமைந்தது
* செப்டம்பர் 2003ல், 12 லட்சம் பங்குகள் சட்டவிரோதமாக, நம்பிக்கை துரோகம் செய்து மாற்றப்பட்டன.
* சன் டிவியின் 60 சதவீத பங்குகள், நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களின் எந்தவித ஆலோசனை, ஒப்புதல் இன்றி கலாநிதி பெயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
* அந்த நேரத்தில் சன் டிவி நிறுவன நிதிநிலை வலிமையாக இருந்தபோது, பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட அவசியம் எழவில்லை.
* அதற்கு முன்பு வரை கலாநிதியிடம் பங்குகள் இல்லாத நிலையில், பங்குகள் மாற்றத்துக்குப் பின் ஐ.பி.ஓ., வெளியிடப்பட்டது.
* இதன் வாயிலாக, நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமையாளராக கலாநிதி மாறியதால், குடும்பத்தின் பங்கு 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமானது.
* கம்பெனிகள் சட்டத்தின்கீழ் இவை தீவிர குற்றங்கள் என்பதால், அரசின் தீவிர குற்ற விசாரணை அலுவலகமான எஸ்.எப்.ஐ.ஓ.,வின் விசாரணை கேட்கப்படலாம்.
* முன்கூட்டியே 12 லட்சம் பங்குகளை தன்வசப்படுத்தியதால், பின்னாளில் பங்கு மதிப்பு 3,500 கோடி ரூபாயாக உயர்வு. 12 லட்சம் பங்குகளுக்கு முகமதிப்பு 10 ரூபாய் என, 1.20 கோடி ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள 3,498.80 கோடி ரூபாய் நிதி மோசடியாக கருதப்பட வேண்டியுள்ளது.
* இதுதவிர, பங்குகள் மீதான டிவிடெண்ட் வாயிலாக, 2023 வரை 5,926 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. 2024ல் மட்டும் 455 கோடி ரூபாய் கிடைத்துள்ளது
* சன் டிவி புதிய பங்கு வெளியிடுவதற்கு முன்னதாக, அதில் தயாளு அம்மாளுக்கு இருந்த பங்குகள் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு பின்னர், அந்த பங்குகளின் மதிப்பு பல மடங்கானது
* மல்லிகா மாறனுக்கு டிவிடெண்டாக 2005ல் 10.64 கோடி ரூபாய் வழங்கியதாக ஆவணப்படுத்திய நிலையில், அதுபோல வழங்காததன் வாயிலாக, நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் பொய் கூறப்பட்டது.
* இந்த குற்றச்செயல்களில் கிடைத்த தொகை வாயிலாக, சன் டைரக்ட், கல் ரேடியோஸ், கல் ஏர்வேஸ், கல் பப்ளிகேஷன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சவுத் ஏசியன் எப்.எம்., சன் பிக்சர்ஸ், தென்ஆப்ரிக்கா, பிரிட்டனில் கிரிக்கெட் அணிகள், ஸ்பைஸ்ஜெட் முதலீடு என ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.
* எனவே, 2003ம் ஆண்டுக்கு முந்தைய பங்குதாரர் நடைமுறையை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். முரசொலி மாறனின் வாரிசுதாரர்கள், தயாளு அம்மாள் ஆகியோர், சொத்துக்களின் உரிமையாளர்களாக்கப்பட வேண்டும்.
* கடந்த, 2003ல் இருந்து சட்டவிரோதமாக பெற்ற பணப்பலன்களான டிவிடெண்ட், சொத்துக்கள், வருமானம் அனைத்தையும் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி ஆகியோர் முரசொலி மாறனின் வாரிசுதாரர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும்.
* இவற்றை செய்யத் தவறினால், சிவில், கிரிமினல், கண்காணிப்பு அமைப்புகள், அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாகவும், கடந்த 2024, அக்., 7ம் தேதி, கலாநிதி மாறனுக்கு முதலாவது நோட்டீஸை தயாநிதி மாறன் அனுப்பியதாக தெரிகிறது