தி.மு.க.,வினரின் ஆபாச பேச்சு; 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்; இ.பி.எஸ்., பேட்டி

21 ஆனி 2025 சனி 10:12 | பார்வைகள் : 134
தி.மு.க.,வினர் பொது வெளியில் ஆபாசமாக பேசுவதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம் தாய்மொழிக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக கொடுக்கின்றார்கள் என்று தான் அமித்ஷா கூறி இருக்கிறார். யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாரத பிரதமர் முன்னின்று நடத்துகிறார் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்: தமிழக அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பொதுவெளியில் ஆபாசமாக பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இதற்கு, ''நாங்கள் ஏற்கனவே இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம்.
தி.மு.க., ஆட்சியை பொருத்தவரைக்கும், இன்று மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
அதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காக, இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிச்சயம் இதற்கான பதில் கிடைக்கும். மக்கள் இதற்கான தக்க தண்டனை வழங்குவார்கள்'' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.