ChatGPT உதவியால் 5 மடங்கு வேகமாக வேலையை முடிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி

19 ஆனி 2025 வியாழன் 16:13 | பார்வைகள் : 139
இந்திய தொழில்நுட்ப முன்னோடியும், இன்போசிஸ் நிறுவனருமான என்.ஆர். நாராயணமூர்த்தி, செயற்கை நுண்ணறிவு கருவியான ChatGPT-ஐ பாராட்டியுள்ளார்.
"முன்பு ஒரு சொற்பொழிவுக்கான உரையை தயார் செய்ய 25 முதல் 30 மணி நேரம் பிடிக்கும். ஆனால் இப்போது ChatGPT-4 பயன்படுத்துவதால், அதையே 5 மணி நேரத்தில் முடிக்க முடிகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Moneycontrol இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், 78 வயதான மூர்த்தி கூறுகையில், "உரையின் மையக்கருவை உறுதி செய்த பிறகு அதற்கு இணையான துணை கருக்கள் அமைத்தல் என்பது மிகவும் முக்கியமான பணியாகும். அதனால்தான் நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன்" என்றார்.
இந்த மாற்றத்திற்கு காரணம் இவரது மகன் ரோஹன் மூர்த்தி தான். ChatGPT பற்றி அறிமுகப்படுத்தியதும், அதை பயன்படுத்த அவரை ஊக்குவித்ததுமாக நாராயணமூர்த்தி கூறினார்.
அத்துடன், AI-யை எதிர்க்காமல் அதை திறமையான தொழிலாளர்களுக்கு உதவும் கருவி எனப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1970-களில் வங்கிகளில் கணினி வந்தபோது அது எதிர்ப்பு பெற்றதுபோல், இப்போது AI எதிர்ப்பு எதிர்கொள்கிறது. ஆனால் கணினி எப்படி வேலை நேரத்தை குறைத்து மக்களுக்கு குடும்ப நேரம் வழங்கியது போல, AI-யும் உதவிகரமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.