கண் நிறத்தை மாற்றும் அறுவை சிகிச்சை அதிகரிப்பு!

19 ஆனி 2025 வியாழன் 15:41 | பார்வைகள் : 469
கண்ணின் நிறத்தை நிரந்தரமாக மாற்றும் 'கேரடோ-பிக்மெண்டேஷன்' (la kérato-pigmentation) எனும் அழகியல் அறுவை சிகிச்சை தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதில் கண்ணின் அடுக்குகளுக்குள் நிறங்கள் செலுத்தப்படுகின்றன. இதன் மூலம் பச்சை அல்லது நீல நிற கண்களைப் பெறலாம். ஆரம்பத்தில் காயங்களுக்கு பிறகு தோற்றக் குறைகளை சரிசெய்ய இதை பயன்படுத்தினாலும், தற்போது இது அழகிற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது ஒரு வகை கண் 'டாட்டூ' போலவே செயல்படுகிறது.
பிரான்ஸ் தேசிய மருத்துவ கல்லூரி இந்த சிகிச்சை பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று புதன்கிழமை எச்சரித்துள்ளது. மேலும் இந்த நுட்பத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து நோயாளிகளுக்கு சிறப்பாகத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
- கண்களில் உலர்ச்சி
- ஒளி உணர்வுகள்
- கண்களில் தெளிவுத்தன்மை குறைபாடு
- பார்வை சோதனைகளில் சிக்கல்கள்
- MRI ஸ்கேன்களில் பாதுகாப்பு பிரச்சனைகள்
ஆகிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. மேலும், ஒரே மாதிரியான நிறம், காலப்போக்கில் நிறம் மங்குவது, கண்களின் பழைய நிறம் வெளிப்படுவது போன்ற தோற்றக் குறைகளையும் ஏற்படுத்தலாம். பிரான்சில், இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 7,000 யூரோக்கள் வரை செலவாகிறது.