ஓரணியில் தமிழகம் : முதல்வர் இன்று துவக்குகிறார்

19 ஆனி 2025 வியாழன் 07:58 | பார்வைகள் : 172
தி.மு.க., அறிவித்துள்ள, 'ஓரணியில் தமிழகம்' திட்டத்தின்படி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 30 சதவீதம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி, இன்று துவங்குகிறது.
மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்குமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றில், பூத் அளவில் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை, தி.மு.க.,வில் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று துவங்குகிறது.
சென்னையில் இந்த நிகழ்ச்சியை, கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. செப்., 17க்குள், உறுப்பினர் சேர்க்கையை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து, ஸ்டாலின் பேசி வருகிறார். கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், தினமும் மூன்று தொகுதி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வந்தனர்.
கிருஷ்ணகிரி உள்ளிட்ட மூன்று தொகுதி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற இருந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால், அது ரத்து செய்யப்பட்டது. அவர்களை, ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.