உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்: இந்திய கடற்படையில் இணைந்தது

19 ஆனி 2025 வியாழன் 09:57 | பார்வைகள் : 612
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் அர்னாலா, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படை தளபதி அனில் சவுஹான் இந்த கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார்.
* இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் 77 மீ.,நீளம் கொண்டது.
*இதில் அதிநவீன நீருக்கு அடியிலான கண்காணிப்பு அமைப்புகள், ஆழமற்ற நீரில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
*டீசல் இன்ஜின் மற்றும் வாட்டர்ஜெட் சேர்ந்து இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை போர்க்கப்பல் இதுவாகும்.
*மஹாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாரம்பரியமிக்க அர்னாலா கோட்டையை நினைவு கூறும் வகையில் இந்த கப்பலுக்கு ஐஎன்எஸ் அர்னாலா எனபெயர் சூட்டப்பட்டு உள்ளது.
பொது மற்றும் தனியார் ஒத்துழைப்பின் கீழ் கோல்கட்டாவைச் சேர்ந்த Garden Reach Shipbuilders and Engineers (GRSE) என்ற நிறுவனம் இந்த கப்பலை கட்டியது. கடந்த மே மாதம் 8 ம் தேதி தமிழகத்தின் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் கூறியதாவது: இந்த கப்பல் நீருக்கு அடியில் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு மற்றும் தீவிர கடல் சார்நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் கடற்படையில் இணைவதன் மூலம்,கடலோர பகுதிகளில் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான இந்திய கடற்படையின் பலம் வலிமை பெறும். தன்னிறைவு இந்தியா என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனக்கூறப்பட்டு உள்ளது.