Paristamil Navigation Paristamil advert login

நாளை அன்புமணி தலைமையில் கட்சிக் கூட்டம்; பா.ம.க., தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி

நாளை அன்புமணி தலைமையில் கட்சிக் கூட்டம்; பா.ம.க., தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி

18 ஆனி 2025 புதன் 17:58 | பார்வைகள் : 319


அன்புமணி தலைமையில் சேலத்தில் கட்சிக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், பா.ம.க., முக்கிய தலைவர்கள் நெஞ்சு வலி காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், இனி உயிர் இருக்கும் வரை பா.ம.க.,வின் தலைவர் பொறுப்பை தானே வகித்துக் கொள்வேன் என்று தீர்க்கமாக கூறி விட்டார். இதையடுத்து, பா.ம.க.,வில் இரு கோஷ்டிகள் உருவெடுத்துள்ளது. இதில், அன்புமணி பக்கமே அதிக நிர்வாகிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ராமதாஸூக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், அன்புமணி தலைமையில் நாளை சேலத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அன்புமணியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே., மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மற்றும் தருமபுரி மாவட்ட கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, அன்புமணி நாளை சேலம் செல்ல உள்ள நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்