நீதிபதிகள் நியமன அதிகாரத்தை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம் : கபில்சிபில்

18 ஆனி 2025 புதன் 12:58 | பார்வைகள் : 151
நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை, 'கொலீஜியம்' அமைப்பிடம் இருந்து பறிப்பதே மத்திய அரசின் நோக்கம்,'' என, ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு, டில்லியில் சொந்தமாக உள்ள வீட்டில் இருந்து, கடந்த மார்ச்சில் கட்டுக்கட்டாக, 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அடுத்த மாதம் துவங்கும் பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடரில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், டில்லியில் நேற்று, ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியதாவது:
வகுப்புவாத கலவரங்களை துாண்டும் வகையில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த தீர்மானம் நிலுவையில் உள்ளது.
ஆனால், உரிய விசாரணை நடத்தாமல் ஆதாரங்களின்றி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு துடிக்கிறது.
என்னை பொறுத்தவரை, அவர் ஒரு நல்ல மனிதர். இதை நான் மட்டுமல்ல, அனைத்து வழக்கறிஞர்களும் ஒப்புக்கொள்வர்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. அதே சமயம், ஆதாரங்களுடன் சிக்கியுள்ள நீதிபதி சேகர் யாதவை மத்திய அரசு பாதுகாக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?
நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பிடம் இருந்து பறித்து, தேசிய நீதித் துறை நியமன கமிஷனிடம் வழங்குவதே மத்திய அரசின் நோக்கம்.
அதற்காகவே நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதை எதிர்க்கட்சிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.