Paristamil Navigation Paristamil advert login

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மழைக்கு வாய்ப்பு

18 ஆனி 2025 புதன் 08:58 | பார்வைகள் : 136


வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை உருவான நிலையில், தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 21 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பார்சன் வேலி, 11; போதி முண்டு, மேல் பவானியில் தலா, 10; கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார் பகுதிகளில் தலா, 9; சோலையார், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அப்பகுதியில் நேற்று காலை, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தென்மேற்கு வங்க தேசம், மேற்கு வங்கம் ஒட்டி காணப்படுகிறது. இது அடுத்த, 24 மணி நேரத்தில், மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு இதனால் நேரடி தாக்கம் இருக்காது.

தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், இடையிடையே, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்