2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!

17 ஆனி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 140
வரும் ஜூன் 22ம் தேதி முருகரை கையில் எடுக்க இருக்கிறோம். 2026ம் ஆண்டு தமிழகத்தையே கையில் எடுப்போம்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரையில் ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். பின்னர், அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நாங்கள் வலிமையோடு இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு, எங்களது கூட்டணியை தி.மு.க.,வினர் குறை சொல்கின்றனர்.
அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் வி.சி.க.,வுக்கு உள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருவதாக இருக்கிறது. இன்னும் உறுதியாகவில்லை. மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கிறார்; அதற்காக அவர் விரதம் இருக்கிறார்.
முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. எந்த அரசியல் கருத்துக்களும் மாநாட்டில் பேச மாட்டோம். மதச்சார்பின்றி அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
திருப்பரங்குன்றத்தில் எந்த பதற்றமான சூழலும் இல்லை. வரும் ஜூன் 22ம் தேதி முருகரை கையில் எடுக்க இருக்கிறோம். 2026ம் ஆண்டு தமிழகத்தையே கையில் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.