Paristamil Navigation Paristamil advert login

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

15 ஆனி 2025 ஞாயிறு 11:33 | பார்வைகள் : 153


முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சாத்தியமற்ற நிபந்தனைகள் விதித்து, தி.மு.க., அரசின் காவல் துறை அடக்குமுறையில் ஈடுபடுவதாக, ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநில துணைத்தலைவர் ஜெயகுமார், மாநில செயலர் மனோகர் ஆகியோர் அளித்த பேட்டி:

தி.மு.க., அரசின் கடும் எதிர்ப்பையும், நெருக்கடிகளையும் மீறி, உயர் நீதிமன்ற அனுமதியுடன், கடந்த பிப்ரவரி 4ம் தேதி, மதுரையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

சில மணிநேர இடைவெளியில், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டது, தி.மு.க.,வை மிரளச் செய்துள்ளது.

அதனால், வரும் 22ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த விடாமல் செய்ய, என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, நடைமுறையில் சாத்தியமற்ற நிபந்தனைகளை விதித்து, அடக்குமுறையில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.

காவல் துறை நிபந்தனை

மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது; வாகனங்களில் வந்தால், ஒவ்வொரு வாகனத்திற்கும், டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனரிடம் நேரில் அனுமதி பெற வேண்டும் என்று, காவல் துறை நிபந்தனை விதிக்கிறது.

இதை மாற்றி, வாகனங்களுக்கு, ஆன்லைனில் அனுமதியளிக்க வேண்டும் என்று, டி.ஜி.பி.,யிடம் கோரிக்கை விடுத்துஉள்ளோம்.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை காரணம் காட்டி, 'ட்ரோன்' பயன்படுத்தக்கூடாது என்கின்றனர். அப்படியெனில், காஷ்மீரைப் போல தமிழகம் உள்ளதாக காவல் துறை கூறுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

மாநாட்டு திடலுக்குள் வருபவர்களை, 'மெட்டல் டிடெக்டர்' கருவிகளை வைத்து பரிசோதித்து அனுப்புவதையும், மாநாட்டை நடத்துபவர்களே செய்ய வேண்டும் என்கின்றனர்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட உயர் பாதுகாப்பில் உள்ள தலைவர்கள் வரவுள்ள நிலையில், காவல் துறை அதன் பொறுப்பை தட்டிக்கழிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் மாநாடல்ல. அதனால்தான், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

நேரம் கொடுக்கவில்லை


இந்த மாநாட்டில் தி.மு.க.,வினரும் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். முதல்வர் ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாவுக்கு, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருகை தர அழைப்பிதழ் கொடுக்க, நேரம் கேட்டோம்; கொடுக்கவில்லை.

அனைத்து மதத்தவர் உணர்வுகளையும் மதிக்கும் நபராக முதல்வர் ஸ்டாலின் இருந்தால், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கட்டாயம் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்