Paristamil Navigation Paristamil advert login

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்

14 ஆனி 2025 சனி 08:47 | பார்வைகள் : 174


மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவும் அறுபடை வீடு மாதிரி வடிவங்கள் அமைக்கவும் அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது

ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு: ஹிந்துக்களிடம் பக்தியை அதிகரிக்கும் நோக்கில் மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட உள்ளன. அவற்றின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்து பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க அனுமதிக்க போலீஸ் கமிஷனர், அண்ணாநகர் போலீசாருக்கு மனு அனுப்பினோம். அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்தார். அதை ரத்து செய்ய வேண்டும். அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க, பூஜைகள் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜூன் 10ல் நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: போலீஸ் தரப்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு மனுதாரர் தரப்பில் விளக்கமளிக்க வேண்டும். மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது ஜூன் 12 க்குள் போலீசார் முடிவெடுக்க வேண்டும். விசாரணை ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். நீதிபதி பி.புகழேந்தி நேற்று விசாரித்தார்.

அறுபடை வீடு மாதிரி வடிவங்கள் அமைக்க அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பு: ஜூன் 22 பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிக்குள் மாநாடு நடத்தி முடிக்க வேண்டும். முருகன் மாநாடு பற்றி மட்டுமே பேச வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் கந்துாரி கொடுப்பது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அது பற்றி பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதியளித்து அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர் தரப்பு: மாநாட்டு அனுமதிக்கு போலீசார் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். 'மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த டி.எஸ்.பி.,அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி அட்டை (பாஸ்) பெற வேண்டும். டூவீலர்களில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடு தற்காலிக மாதிரி வடிவங்கள் நிறுவ கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை, மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். 'ட்ரோன்' பறக்க அனுமதியில்லை' என்ற நிபந்தனைகள் ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

மாநாட்டில் பங்கேற்க வாகன அனுமதி கோரிய 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும். நிராகரித்தால் அதற்குரிய காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும். அறுபடை வீடு தற்காலிக மாதிரி வடிவங்கள் அமைக்க நில உரிமையாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அருகில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளதாகக்கூறி போலீஸ் தரப்பில் நிராகரித்தது ஏற்புடையதல்ல. இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மாநாட்டு வளாகத்தில் 2 'ட்ரோன்'கள் பறக்க அனுமதிக்க வேண்டும். மாநாடு நடைபெறும் மைதானத்தில் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடு நடந்துள்ளது. மாநாட்டின்போது ஒலி மாசு ஏற்படாமல் இருப்பதை மனுதாரர் தரப்பு உறுதி செய்ய வேண்டும். வாகன ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் இடம்பெறக்கூடாது. மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்