நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்..!

13 ஆனி 2025 வெள்ளி 15:24 | பார்வைகள் : 249
‘நடிப்பு ராட்சசி’ என பலராலும் பாராட்டப்பட்டவர் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி தற்போது குணச்சித்திரம், காமெடி, அம்மா வேடங்களில் கலக்கி வருகிறார். 1979 ஆம் ஆண்டு வெளியான ‘கதிர் மண்டபம்’ என்கிற மலையாள படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமான ஊர்வசி, தமிழில் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழில் ‘தூள்’, ‘திருட்டுப் பயலே’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த நடிகர் மனோஜ் கே ஜெயனை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2001 ஆம் ஆண்டு மகளாக தேஜலக்ஷ்மி பிறந்தார். மனோஜ் கே ஜெயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து ஊர்வசி விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஊர்வசி - சிவபிரசாத் தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். மனோஜ்-ம் ஆஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தனது தாய் தந்தையரை போலவே திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் தேஜலக்ஷ்மி. ‘சுந்தரியாயவல் ஸ்டெல்லா’ என்கிற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சர்ஜனோ காலித் நடிக்க உள்ளார். சர்ஜனோ ‘டிமான்டி காலனி 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊர்வசி, மகள் நடிக்க இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது மகள் நடிக்கும் முதல் படத்தை ஊர்வசி தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மகள் ஹீரோயின் ஆகப்போவதை அறிந்த மனோஜ் மிகப் பெருமைப்படுவதாகவும், சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்றும் கூறியுள்ளார். தானும் ஊர்வசியும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து நடிகர்களான நிலையில் தேஜலக்ஷ்மிக்கு முதலிலேயே ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறி கண்கலங்கினார். தேஜாவின் நடிப்பு ஆசையை தனது இரண்டாவது மனைவி ஆஷாவின் வழியாக அறிந்ததாகவும், மகளின் ஆசையை அறிந்த உடனேயே ஊர்வசியை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி வருமாறு கூறியதாகவும், அவரும் சென்னை சென்று ஊர்வசியிடம் தனது விருப்பத்தை கூறி ஆசீர்வாதம் வாங்கிய பின்னரே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக மனோஜ் கூறியுள்ளார்.