Paristamil Navigation Paristamil advert login

மின்சார கொள்முதல் முறைகேடால் ரூ.11,212 கோடி இழப்பு ! மின் பொறியாளர்கள் அமைப்பு குற்றச்சாட்டு

மின்சார கொள்முதல் முறைகேடால் ரூ.11,212 கோடி இழப்பு ! மின் பொறியாளர்கள் அமைப்பு குற்றச்சாட்டு

13 ஆனி 2025 வெள்ளி 12:05 | பார்வைகள் : 181


எஸ்.இ.பி.சி., நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறது. அந்நிறுவனம், மூலதன செலவை உயர்த்த கோரிய மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களுக்கு வெளியிட்டு, கருத்து கேட்க வேண்டும்,'' என, தமிழக மின் துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

துாத்துக்குடியில், எஸ்.இ.பி.சி., பவர் நிறுவனம், 525 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. அதனிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.

கடந்த, 1998ல் எஸ்.இ.பி.சி., மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் செய்தது. பின், ஒழுங்குமுறை ஆணையம், 2015ல் அனுமதி வழங்கியது.

அதிகபட்ச முதலீடு, 3,514 கோடி ரூபாயை தாண்டக்கூடாது, 2018க்குள் மின் நிலையம் அமைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

கடந்த, 2021ல் தான் மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்நிறுவனம், கூடுதல் செலவு செய்துள்ளதாக கூறி, மூலதன செலவை, 3,249 கோடி ரூபாயில் இருந்து, 5,118 கோடி ரூபாய்க்கு உயர்த்தி வழங்க வேண்டும் என, ஆணையத்திடம் மனு செய்துள்ளது.

கூடுதலாக கேட்கும், 1,126 கோடி ரூபாய் இன்னும் செலவு செய்யவில்லை. செலவழிக்காத தொகையை செலவு செய்ததாக கூறி, மின் கொள்முதல் விலையையும் உயர்த்தும்படி கூறுகிறது.

மூலதன செலவான, 3,249 கோடி ரூபாயை, 5,118 கோடி ரூபாயாக உயர்த்தினால், அதில் நிலை கட்டணமாக உள்ள, 724 கோடி ரூபாய், 1,140 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால் ஓராண்டிற்கு, 416 கோடி ரூபாய் கூடுதல் செலவு வீதம், கொள்முதல் காலமான 27 ஆண்டுகளுக்கு, 11,212 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படும்.

இந்த கொள்ளையை தடுக்காமல், ஒரு ஒழுங்கு கூட இல்லாமல் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது. இந்த கொள்ளை, மின்கட்டணமாக மக்கள் தலையில் தான் சுமத்தப்படும்.

எஸ்.இ.பி.சி., மனுவை மக்கள் பார்வைக்கு வெளியிட்டு, ஆணையம் கருத்து கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்