லண்டன் கிளம்பிய விமானம் விழுந்து வெடித்தது : 241 பேர் பலி

13 ஆனி 2025 வெள்ளி 05:05 | பார்வைகள் : 1317
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானம், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்தது. 600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்து மாணவர்களும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது, நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர், இரண்டு விமானிகள், 10 விமான பணியாளர்கள் என, மொத்தம் 242 பேருடன், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான, 'போயிங்' 787' ரக 'ட்ரீம் லைனர்' இரட்டை இன்ஜின் விமானம், நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது.
இதில், இந்தியாவைச் சேர்ந்த 169 பேர்; பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர்; போர்ச்சுக்கலைச் சேர்ந்த ஏழு பேர்; கனடாவைச் சேர்ந்த ஒருவர் என, 230 பேர் உட்பட 242 பேர் பயணித்தனர்.
ஓடுபாதை - 23ல் இருந்து புறப்பட்ட விமானம், 600 - 800 அடி உயரம் மட்டுமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தால், அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேகனி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லுாரி விடுதி மீது, விமானத்தின் முன்பகுதி மோதியது. அப்போது, விடுதியில் உள்ள உணவு அருந்தும் இடத்தில், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில், '11 ஏ' இருக்கையில் இருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஷ்வாஸ் குமார் தவிர, விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். பா.ஜ., மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானியும், 68, உயிரிழந்தவர்களில் ஒருவர்.
மருத்துவக் கல்லுாரி விடுதியில், ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
ஆங்காங்கே உடல் கருகி சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விமானத்தின் உடைந்த பாகங்களையும் மீட்டனர்.
விபத்தை தொடர்ந்து, ஆமதாபாத் விமான நிலையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில மணி நேரங்களுக்கு பின், மீண்டும் வழக்கம்போல் செயல்பட துவங்கியது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கருப்பு பெட்டி என்பது, விமானத்திற்குள் தகவல் சேமிக்க பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விமானம் விபத்திற்குள்ளாகும் போது, அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு இக்கருவி பெரிதும் உதவுகிறது.
இதற்கிடையே, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே, 'மே டே' எனப்படும் அவசர உதவி அழைப்பை விமானியர் மேற்கொண்டதாகவும், ஆமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, சிக்னல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
போயிங் விளக்கம்
விபத்து குறித்து போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'ஆரம்பகட்ட அறிக்கைகள் கிடைத்துள்ளன. மேலும், தகவல்களை சேகரிக்க தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பங்குச் சந்தையில் போயிங் நிறுவன பங்குகள் வெகுவாக சரிந்தன.
2 மணி நேரத்துக்கு முன் தான் பயணித்தேன்
பயணி பரபரப்பு குற்றச்சாட்டுஆமதாபாதில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அந்த விமானத்தில் தான் இரண்டு மணி நேரத்துக்கு முன் பயணித்ததாக ஆகாஷ் வட்சா என்ற பயணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விமானத்திற்குள் எடுக்கப்பட்ட சில வீடியோக்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''விபத்துக்கு உள்ளான விமானத்தில் தான், இரண்டு மணி நேரத்துக்கு முன், டில்லியில் இருந்து ஆமதாபாதுக்கு வந்தேன். விமானத்தில் அசாதாரண விஷயங்களைக் கவனித்தேன். இதை தெரிவிக்கவே வீடியோ எடுத்தேன்,'' என்றார்.
சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு
ஆமதாபாதில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று மாலை பார்வையிட்டார். தொடர்ந்து, விபத்தில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஒரெயொரு நபரான விஸ்வாஸ் குமாரை சந்தித்து, அமைச்சர் அமித் ஷா ஆறுதல் கூறினார். முன்னதாக, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விபத்து பகுதியை பார்வையிட்டார்.
ஏ.ஏ.ஐ.பி., விசாரிக்கிறது
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரிக்க உள்ளது. இந்த பிரிவின் அதிகாரிகள், விரைவில் ஆமதாபாதுக்கு நேரில் சென்று விபத்து பகுதியை பார்வையிட்டு விசாரணையை துவங்க உள்ளனர். இந்த குழுவினர் விபத்து நடந்ததற்கான காரணத்தை கண்டறிவதுடன், எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமலிக்க மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளையும் வழங்குவர்.
ரூ.1 கோடி நிவாரணம்
டாடா குழுமம் வெளியிட்ட அறிக்கையில், 'ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது வேதனை அளிக்கிறது. துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, டாடா குழுமம் சார்பில் தலா, 1 கோடி ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் ஏற்கிறோம். விபத்தில் சேதமடைந்த பி.ஜே.மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டத்தை புனரமைத்து தருவோம்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பறவை மோதியதால் விபத்தா?
மானத்தின் இரண்டு இன்ஜின்களிலும் பறவைகள் மோதியதால் விமான இயக்க சக்தி முற்றிலுமாக இல்லாமல் போயிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக டி.ஜி.சி.ஏ., எனப்படும், மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் அளித்து உள்ளது.
டி.ஜி.சி.ஏ., அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட, 'ஏர் - இந்தியா'வின், போயிங் 787 விமானத்தில், 230 பயணியர், 2 விமானிகள் மற்றும் 10 விமான கேபின் பணியாளர்கள் இருந்தனர்.விமானம் புறப்பட்டதற்குப் பின், ரன்வே 23ல் இருந்து பறக்க துவங்கிய உடனேயே, விமானிகள் மேடே எனும் ஆபத்துக்கான அழைப்பை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு அனுப்பினர். அதன்பின், விமானத்துடன் எந்த தொடர்பும் ஏற்படாமல் போனது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய எல்லைக்கு வெளியே உள்ள தரையில் விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை காணப்பட்டது.விமானம் நேரடியாக அகமதாபாத் மேகானி நகர் பகுதியில் உள்ள பி.ஜே., மருத்துவக் கல்லுாரியின் விடுதியின் கட்டடத்தின் மீது விழந்தது.விமானத்தின் இரண்டு இன்ஜின்களிலும் பறவைகள் மோதியதன் காரணமாக விமான இயக்க சக்தி முற்றிலுமாக இல்லாமல் போயிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.விமானம் பறப்பதற்கு முன்னர் பறவைகள் சுற்றி இருந்ததற்கான சாட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த விமான விபத்துக்கான முழுமையான காரணங்களை உறுதி செய்ய விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.