வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை

12 ஆனி 2025 வியாழன் 08:19 | பார்வைகள் : 1147
கடந்த சட்டசபை தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை, தி.மு.க., இன்னும் நிறைவேற்றவில்லை, என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, மாநில அரசு செயல்படுத்த வேண்டும். மக்கள் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னையில் நேற்று பிரசார இயக்க நடைபயணம் துவக்கப்பட்டது.
அதை துவக்கி வைத்த பின், சண்முகம் அளித்த பேட்டி:
தி.மு.க.,வின் ஆட்சி காலம் முடிய இன்னும் 10 மாதமே உள்ளது. தேர்தலுக்கு முன், நிறைய வாக்குறுதிகளை தி.மு.க., அளித்தது.
கணக்கில் பிரச்னை
ஆனால், ஆட்சிக்கு வந்தபின், அவற்றை நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகளை, ஆட்சி முடிவதற்குள் நிறைவேற்ற வேண்டும்.
மாதந்தோறும் மின்சார கணக்கெடுப்பு நடத்துவோம் என வாக்குறுதி அளித்தனர். இன்றுவரை செய்யவில்லை.
அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. ஆனால், மக்களை வசிப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்துகின்றனர்.
கடந்த தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இதுவரை 98.5 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, தி.மு.க., கூறுகிறது. அப்படி என்றால், அதன் கணக்கில் ஏதோ பிரச்னை உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், நாங்கள் போட்டியிட்ட இடங்களை வைத்து, எங்களுக்கு ஓட்டு சதவீதம் இவ்வளவுதான் என யாரும் தீர்மானிக்க முடியாது.
அதிக இடங்களில் போட்டியிட்டிருந்தால், அதிக ஓட்டு சதவீதம் வந்திருக்கும். கோவை, திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டங்களில், நாங்கள் போட்டியிட முடியாமல் போனதை மறந்துவிடக்கூடாது.
கூடுதல் தொகுதி
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்கும் வலிமை, தி.மு.க., கூட்டணிக்கு உள்ளது. அது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட்கள் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவதும் முக்கியமானது.
இவ்வாறு சண்முகம் கூறினார்.
சில நாட்களாக, சண்முகத்துக்கு பதில் சொல்லாமல் இருந்த தி.மு.க., இப்போது, செய்தி தொடர்பாளர் இளங்கோவன் வாயிலாக, கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது. 'கூட்டணி இல்லாமல், மார்க்சிஸ்ட் கட்சியால் தனித்து போட்டியிட முடியுமா' என, அவர் கேட்டுள்ளார்.
நாங்களும் கேட்போம்
மா.கம்யூ., கட்சி அதிக தொகுதிகளை கேட்போம் என்ற கருத்தை சொல்லி இருக்கிறது. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். ஐந்து, ஆறு கொடுத்தாலே போதும், பெற்றுக்கொள்வார்கள் என்று எங்களை எவரும் சொல்ல முடியாது. தேர்தலுக்கு தேர்தல் நிலைமை மாறுகிறது. தி.மு.க., தலைவர் எங்களோடு பேசும்போது, சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம்.- திருமாவளவன்தலைவர், வி.சி.,