நாடு கடத்தப்பட்ட கிரெட்டா துன்பெர்க்... இஸ்ரேல் நிர்வாகம்

11 ஆனி 2025 புதன் 11:15 | பார்வைகள் : 658
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் கப்பலில் பயணித்த கிரேட்டா துன்பெர்க் உட்பட 12 சமூக ஆர்வலர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், கிரேட்டா உட்பட நால்வர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
உதவிப் பொருட்களுடன் காஸாவிற்குப் பயணித்த மாட்லீன் கப்பல், நேற்று கரையை அடைவதற்கு முன்பே இஸ்ரேலிய கடற்படை படகுகளால் முற்றுகையிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குறித்த கப்பலில் பயணித்த 12 பேர்களில் 8 பேர் நாடுகடத்தல் ஆவணங்களில் கையெழுத்திட மறுத்து, நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் கிரெட்டா துன்பெர்க் உட்பட நால்வர் ஆவணங்களில் கையெழுத்திட்டு இஸ்ரேலில் இருந்து விமானத்தில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிரேட்டா உட்பட அந்த நால்வரும் பிரான்ஸில் தரையிறங்கியுள்ளனர். விமானத்தில் இனி ஒருபோதும் பயணிக்கப் போவதில்லை என்ற முடிவெடுத்திருந்த கிரேட்டா தற்போது இஸ்ரேல் நிர்வாகத்தால் விமானப் பயணம் மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தில் அமர்ந்திருக்கும் கிரேட்டா துன்பெர்க் புகைப்படத்தை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்து கொண்டது.
மட்டுமின்றி, நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் தாக்குதல் காட்சிகளின் காணொளியை கிரேட்டா உட்பட 12 சமூக ஆர்வலர்களும் பார்வையிட இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
யூத எதிர்ப்பு கிரேட்டாவும் அவரது சக ஹமாஸ் ஆதரவாளர்களும் தாங்கள் ஆதரிக்க வந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு யார் என்பதை சரியாகப் புரிந்துகொள்வது பொருத்தமானது.
அவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஹமாஸ் படைகள் என்ன அட்டூழியங்களைச் செய்தார்கள், இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள யாருக்கு எதிராகப் போராடுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கிரேட்டா உட்பட சமூக ஆர்வலர்கள் அந்த ஆவணப்படத்தை பார்வையிட மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டினியால் வாடும் காஸா மக்களுக்கு உதவி வழங்க விரும்பியதற்காக கிரேட்டா துன்பெர்க் மற்றும் அவரது சக ஆர்வலர்களை யூத எதிர்ப்பாளர்கள் என முத்திரை குத்தியதற்காக அமைச்சர் காட்ஸ் மற்றும் பிற இஸ்ரேலிய அதிகாரிகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது மனிதாபிமான உதவி அல்ல. இது வெறும் இன்ஸ்டாகிராம் நாடகம் என இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் டேவிட் மென்சர் கிண்டலடித்துள்ளார்.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளும் உதவித் தடைகளும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காஸா பிரதேசத்தை பஞ்சத்தின் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் காஸா மக்களுக்கான உதவியை முடக்கியுள்ளதுடன் இஸ்ரேல் இராணுவம் தங்களை வலுக்கட்டாயமாக கடத்தியதாகவே கிரேட்டா உட்பட 12 சமூக ஆர்வலர்களும் இந்த பயணத்தை திட்டமிட்ட FFC அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது.