சொத்துக்களை பதிவு செய்வதால் மட்டுமே ஒருவர் உரிமையாளர் கிடையாது: உச்ச நீதிமன்றம்

11 ஆனி 2025 புதன் 11:46 | பார்வைகள் : 1139
சொத்துக்களை பதிவு செய்வதால் மட்டுமே ஒருவர் அந்த சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது. அது மட்டுமே அந்த சொத்தை முழுமையாக உரிமை கொண்டாடுவதற்கான ஆவணம் கிடையாது' என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சொத்து உரிமை தொடர்பான வழக்கு ஒன்றில், மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதன் விபரம்:
ஒரு சொத்தை பதிவு செய்வதால் மட்டுமே அந்த சொத்துக்கு ஒருவர் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. பதிவு ஆவணங்கள் கூடுதலான ஆதாரமாக மட்டுமே கருதப்படும்.
ஒரு சொத்தை முழுமையாக பயன்படுத்துவது, வேறு ஒருவருக்கு மாற்றி விடுவது போன்றவற்றிற்கு இந்தப் பதிவு ஆவணங்கள் மட்டுமே போதுமானது கிடையாது.
மாறாக, அந்த சொத்து தொடர்பான அத்தனை ஆவணங்களும் முழுமையாக இருக்க வேண்டும். அப்போது தான் அதை ஒருவர் உரிமை கொண்டாட முடியும்.
தடையில்லா சான்று
சொத்து அமைந்துள்ள சர்வே எண்கள், குறிப்பிட்ட சொத்தின் சொத்துரிமை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற உள்ளூர் அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள், சொத்து விற்கப்படுவதன் வாயிலாக அதன் உரிமை மாற்றப்படுகிறது என்றால், எவ்வளவு ரூபாய்க்கு அது விற்கப்படுகிறது, என்னென்ன நிபந்தனைகள் போன்ற விபரங்கள் அடங்கிய, 'சேல் அக்ரிமென்ட்' இருக்க வேண்டும்.
அதில் விற்பவர்கள், வாங்குபவர்களின் கையொப்பம், சாட்சிகளின் கையொப்பம், 'ஸ்டாம்ப் டியூட்டி', பத்திரப்பதிவு ஆவணங்களில் மேற்கொள்ளப்படும் பதிவு ஆவணங்கள் இருக்க வேண்டும்.
இவை அனைத்திற்கும் பின், சொத்துரிமைக்கான பத்திரப்பதிவு அலுவலகம் வழங்கும் சான்றிதழ், குறிப்பிட்ட அந்த சொத்தின் மீது வங்கிக் கடனோ அல்லது இதர பிரச்னைகளோ நிலுவையில் இல்லை என்ற தடையில்லா சான்றிதழ், சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள் மிக அவசியம்.
இவை அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய விபரங்களை பதிவு செய்யும், 'மியூட்டேஷன்' சான்றிதழ் ஆகியவை அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் ஒரு சொத்து முழுமையாக இன்னொருவருக்கு அதன் உரிமை மாற்றப்பட்டதாக கருதப்படும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு, சொத்துக்களை அபகரிப்பது, முறைகேட்டில் ஈடுபடுவது போன்றவற்றை தடுப்பதுடன் சொத்து பரிமாற்றங்களிலும், ரியல் எஸ்டேட் துறையிலும், சட்டத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.