உக்ரைன் தாக்குதல் - ஒரே இரவில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை வீசிய ரஷ்யா

9 ஆனி 2025 திங்கள் 17:40 | பார்வைகள் : 395
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் ஆபரேஷன் Spider's Web என பெயரிடப்பட்ட தாக்குதல் மூலம், உக்ரைன் ரஷ்யா மீது 117 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதில், ரஷ்யாவின் 40 விமானங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா பெரிய பதிலடியை கொடுக்கும் என அமெரிக்கா உக்ரைனை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், 3 வருட போர் காலத்தில் இல்லாத வகையில், உக்ரைன் மீது பெரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா நடத்தியுள்ளது.
உக்ரைனின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளை குறிவைத்து, ரஷ்யா ஒரே இரவில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியுள்ளது.
உக்ரைனின் ரிவ்னே பகுதியில் உள்ள டப்னோ விமான தளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்தியாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்தாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதில் உக்ரைன் குடிமகன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இரவு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், போர் தொடங்கியதிலிருந்து தனது பிராந்தியத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என மேற்கு நகரமான ரிவ்னேவின் மேயர் ஒலெக்சாண்டர் ட்ரெட்யாக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதலுக்கு குறிவைக்கப்பட்ட சில பகுதிகளில், நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார்.