அதிரவைக்கும் இஸ்ரேல் ஆவணங்கள்... வெளியிட இருப்பதாக மிரட்டும் ஈரான்

9 ஆனி 2025 திங்கள் 09:08 | பார்வைகள் : 532
ஈரானால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலிய ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கதீப் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணங்களை ஒரு புதையல் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அது ஈரானின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் என்றார்.
ஈரானிய உளவுத்துறை அமைப்புகள் இஸ்ரேலின் முக்கியமான ஆவணங்களின் பெரும் தொகுப்பைப் பெற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.
அந்த ஆவணங்கள் இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுடனான அதன் உறவுகள் மற்றும் அதன் தற்காப்புத் திறன்களுடன் தொடர்புடையவை என்று அமைச்சர் கதீப் கூறியுள்ளார்.
இந்தத் தகவல் மீறல் கடந்த ஆண்டு இஸ்ரேலிய அணு ஆராய்ச்சி மையத்தின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஹேக்கிங் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தனது அணுசக்தித் திட்டம் குறித்த பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தற்போதுதான் அதை வெளிப்படுத்தி வருகிறது.
இதனிடையே, இந்தப் புதையலை மாற்றுவது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேவைப்படுத்துவதாகவும் இருந்தது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இயற்கையாகவே, பரிமாற்ற முறைகள் ரகசியமாகவே இருக்கும், ஆனால் ஆவணங்கள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்றார்.
கடந்த 2018 ல், இஸ்ரேலிய முகவர்கள் ஈரானிய ஆவணங்களின் ஒரு பெரிய தொகுப்பைக் கைப்பற்றியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதில் ஈரானின் அணுசக்தி தொடர்பான தரவுகள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், அந்நாட்டின் மீது குண்டு வீசுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, ஏப்ரல் மாதத்தில், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவாக, ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதலை ட்ரம்ப் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக ஈரான் விடுக்கும் மிரட்டல் தொடர்பில் நெதன்யாகு நிர்வாகம் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.