பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி

7 ஆனி 2025 சனி 11:51 | பார்வைகள் : 153
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா பயங்கர தாக்குதலை நடத்தியது. இதன் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு இந்திய எம்.பி.,க்கள் குழு நேரில் சென்று விளக்கம் அளித்தது.
அமெரிக்காவிற்கு சென்ற இந்திய குழுவிடம், ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் பார்லிமென்ட் குழுவினரிடம் இந்தியாவின் நிலைப்பாட்டை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு விளக்கம் அளித்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டும் என இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.