பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்; இந்தியாவுக்கு பிரிக்ஸ் அமைப்பு ஆதரவு!

7 ஆனி 2025 சனி 09:51 | பார்வைகள் : 502
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பில் தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. பிரேசிலில் 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லி குழு கூட்டம் நடந்தது. இதில் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்றது.
அப்போது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பார்லிமென்டுகளும் ஒப்புக்கொண்டன. பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை கடைப்படிப்பது தொடர்பாகவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.