Paristamil Navigation Paristamil advert login

முதல் குழந்தையில் இருந்தே குடும்ப உதவித் தொகை ஆரம்பம்!

முதல் குழந்தையில் இருந்தே குடும்ப உதவித் தொகை ஆரம்பம்!

6 ஆனி 2025 வெள்ளி 22:46 | பார்வைகள் : 2483


குடும்ப உதவித்தொகை (allocations familiales) இனிமேல் முதலாவது குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படலாம் என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் எம்.பி. எட்வார்ட் பெனார்ட் (Édouard Bénard) கொண்டு வந்த இந்த சட்டத்தை 103 பேர் ஆதரித்தும், 17 பேர் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இப்போது இது செனட் சபைக்கு அனுப்பப்படும். இந்த சட்டமானது தற்போது இரண்டாவது குழந்தைக்குப் பிறகே குடும்ப உதவித் தொகை வழங்கப்படுகிறது. புதிய சட்டத்தில், முதல் குழந்தையிலிருந்தே மாதத்திற்கு 19 யூரோக்கள் முதல் 75 யூரோக்கள் வரை வருமானத்தைப் பொறுத்து வழங்கப்படும். 

இது ஒரு குழந்தையைக் கொண்ட 3.5 மில்லியன் குடும்பங்களை ஆதரிக்கும் ஒரு சமூக நியாயச் செயல் என எட்வார்ட் பெனார்ட் கூறியுள்ளார். அரசாங்கமும் மக்ரோனியக் குழுவும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அவர்களுடைய கருத்துப்படி, இது ஏழை குடும்பங்களுக்கு நன்மை தராது, மாறாக அவர்கள் பெறும் பிற நல உதவிகளை குறைக்கும். மேலும், செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக இத்திட்டம் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். 

RN கட்சிக்காரர்கள், இவ் உதவியைப் பெறுவதற்கு இரண்டு பெற்றோரில் ஒருவர் பிரஞ்சு குடியுரிமை கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு திருத்தத்தை முன்வைத்துள்ளனர். இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. மசோதா தற்போது செனட் சபைக்கு  செல்கிறது. அடுத்து வரும் வாரங்களில் சட்டப்பூர்வமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்