விமான நிலையங்கள் - அமைச்சகங்கங்கள் முடக்க திட்டம்!!

6 ஆனி 2025 வெள்ளி 17:27 | பார்வைகள் : 770
வாடகை மகிழுந்து சாரதிகள் கடந்த மே மாதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததை அடுத்து, ஜூன் மாதத்திலும் அதனை தொடர உள்ளனர். இம்மாதம் 11 ஆம் திகதி மீண்டும் அமைச்சகங்களையும், விமான நிலையங்களையும் முடக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.
Fédération nationale des taxis அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். அதன் படி ஓர்லி மற்றும் சாள்-து-கோல் விமான நிலையங்களுக்குச் செல்லும் வீதிகளையும், பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சகத்துக்கு முன்பாகவும் அவர்கள் மகிழுந்துகளை மிகவும் மெதுவாகச் செலுத்தி தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு €13 யூரோக்கள் எனும் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. விரைவில் நடைமுறைக்கு வர உள்ள இந்த சட்டத்தினால் வாடகை மகிழுந்து சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.