பல்கலைக்கழகங்களில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான புதிய சட்டம்!

8 வைகாசி 2025 வியாழன் 16:20 | பார்வைகள் : 1330
பல்கலைக்கழகங்களில் யூத விரோதத்துக்கும் இனவெறிக்கும் எதிராக புதிய சட்டமசோதா தேசிய பேரவையில் (Assemblée nationale) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா 131 ஆதரவுடனும், 28 எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்டது.
இதில், ஒரே கல்வி வட்டத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பொதுவான ஒழுங்குப்பிரிவை உருவாக்கும் 3ஆவது கட்டுரை மீண்டும் சேர்க்கப்பட்டது. இதில் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பேணும் வகையில், ஒழுங்குப்பிரிவை அந்தந்த கல்வி நிறுவனத்தலைவர்கள் அல்லது இயக்குநர்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என அரசாங்கம் திருத்தம் கூறுகிறது.
இந்த மசோதா, Sciences Po Paris-இல் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு மாநாட்டின் பின்னணியில் உருவான யூத விரோத குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. "யூத எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் ஒரு மாணவர் கூட வகுப்பிற்குச் செல்லத் தயங்கக்கூடாது" என்று உயர்கல்வி அமைச்சர் பிலிப் பப்டிஸ்ட் (Philippe Baptiste) செவ்வாயன்று கூறியுள்ளார்.
விவாதங்கள் கடுமையாக மாறிய நிலையில், La France Insoumise குழு இதை யூத விரோதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மசோதா தற்போது ஒரு தீர்வை கண்டறிய கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.