Paristamil Navigation Paristamil advert login

பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி

பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி

4 வைகாசி 2025 ஞாயிறு 11:58 | பார்வைகள் : 103


பயங்கரவாத தாக்குதல் நடத்திய நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை மத்திய அரசு தொடர்கிறது. அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, துாதரக உறவு துண்டிப்பு, விசா மறுப்பு என, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு, மேலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஒரே நாளில் மூன்று அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

இறக்குமதிக்கு தடை

இதன்படி, அந்த நாட்டில் இருந்து எந்த ஒரு இறக்குமதிக்கும், அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும் அனுமதி மறுப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்தது.

ஏற்கனவே, 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 200 சதவீத வரியை மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஏற்கனவே மிக மிக குறைந்த அளவே இருந்தது.

அதுவும், உலர் பழங்கள், ஹிமாலயன் உப்பு போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

அதே நேரத்தில் நம் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி தொடர்ந்தது. கடந்த 2024 - 25 நிதியாண்டில் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 3,786 கோடி ரூபாய். அதே நேரத்தில் இறக்குமதி 3.55 கோடி ரூபாய்.

இதன்படி பார்க்கையில், பாகிஸ்தானின் பொருட்களை சார்ந்து நம் நாடு இல்லை. ஆனால், இந்திய பொருட்களை பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருந்தது. அதனால், அரசின் இந்த புதிய அறிவிப்பால், நமக்கு பெரிய பொருளாதார பாதிப்பு இருக்காது. ஆனால், பாகிஸ்தானுக்கு பெரிய அடியாக இருக்கும்.

செல்ல வேண்டாம்

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடியை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் கொடியுடன் கூடிய எந்த ஒரு வணிக கப்பல்களும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு துறைமுகத்துக்குள்ளும் நுழைய உடனடி தடை விதித்து, அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுபோல, நம் தேசிய கொடியுடன் கூடிய எந்த ஒரு கப்பல்களும், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

பார்சல் அனுப்ப முடியாது

நாட்டின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தானில் இருந்து, தபால் அல்லது பார்சல்கள் நம் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்து, மத்திய தொலைதொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆகாயம், சாலை என, எந்த மார்க்கத்திலும், பாகிஸ்தானில் இருந்து தபால்கள் மற்றும் பார்சல்களை ஏற்க மாட்டோம் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, இங்கிருந்தும், பாகிஸ்தானுக்கு பார்சல்களை அனுப்ப முடியாது.

நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் என, மூன்று அமைச்சகங்களும் தெரிவித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்