விமான தாக்குதல் பயத்தில் வான்வெளியை மூட பாகிஸ்தான் முடிவு

2 வைகாசி 2025 வெள்ளி 10:50 | பார்வைகள் : 172
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் உளவுத்துறை உதவியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், பாகிஸ்தானில் கராச்சி மற்றும் லாகூர் வான்வெளித் தடங்கள் நாள்தோறும் நான்கு மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாக்., அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பாதுகாப்பு காரணங்களுக்காக நாள்தோறும் காலை 4:00 மணி முதல், 8:00 மணி வரை கராச்சி, லாகூர் வான்வெளி தடங்கள் மூடப்படும். இந்த நேரத்தில் வரும் விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் உள்ள ஜின்னா மற்றும் லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் முழுதும் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.