பரிசில் Saint-Louis மருத்துவமனை அருகே தீ விபத்து: பாதுகாப்புக்காக நோயாளிகள் இடமாற்றம்!

1 வைகாசி 2025 வியாழன் 15:11 | பார்வைகள் : 345
பரிஸின் 10வது வட்டத்தில் அமைந்துள்ள Saint-Louis மருத்துவமனை அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் இறக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த குப்பைகள் கொண்ட ஒரு வாகனத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள கட்டடத்துக்கு பரவியது. இந்த தீயைக் கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீவிபத்தில் யாரும் காயமடையவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். இரு ஜெனரேட்டர்கள் சேதமடைந்துள்ளன. மருத்துவ சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நோயாளிகள் மருத்துவமனையின் பிற பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தீவிபத்து முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு சில நோயாளிகள் பரிஸ் பகுதியில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு இடமாற்றப்பட்டனர். ஒக்சிஜன் வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட சிறிய குழப்பத்தால் இந்த மாற்றம் தேவைப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீவிபத்தின் காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை, இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.