இது வெறும் ஆரம்பம் மட்டுமே -உள்துறை அமைச்சர்!!

17 வைகாசி 2025 சனி 11:36 | பார்வைகள் : 847
கிரிப்டோ தொழில்முனைவோர்கள் மீது தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்களுக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் புருனோ ரத்தெய்யோ, நேற்று வெள்ளிக்கிழமை, தொழில்துறையின் முக்கிய தலைவர்களுடன், முக்கிய சந்திப்பை நடத்தினார்.
கிரிப்டோ உலகம் மீது கவலைக்கிடமான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்வதாகவும், தனியார் பாதுகாப்புக்கு அரசு உதவிசெய்யும் திட்டங்களை ஆராய்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, பாரிஸின் மையத்தில், Paymium எனும் கிரிப்டோ பரிமாற்ற நிறுவனத்தின் தலைவரின் மகளும் பேரனும் கடத்துவதற்குச் செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம், அதிரடியாக முறியடிக்கப்பட்டது.
இது தவிர, 2021 முதல், பத்து சம்பவங்களில், நான்கு கடத்தல்கள் இந்த ஆண்டு மட்டும் பதிவாகியுள்ளன. இவை முதலீட்டாளர்கள் அல்லது அவர்களின் குடும்பங்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்களாகும்.
நேற்று நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனையின் பின்னர், பாதுகாப்பை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
உள்நாட்டு பாதுகாப்பு படைகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பு
அவசர அழைப்பு எண் 17-க்கு முன்னுரிமை அணுகல்
காவற்துறையினரும் ஜோந்தாமேரியினரும், வீட்டில் நேரில் வந்து பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்வது
Adan (Association pour le développement des actifs numériques) எனும் கிரிப்டோ நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு, அமைச்சின் செயல்பாட்டை வரவேற்றுள்ளது.
குறுகிய கால நடவடிக்கைகள் அவசியம். ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீடித்த, ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நீதித்துறை, பொருளாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை முழுமையாக இணைந்திருக்க வேண்டும் என Adan வலியுறுத்தியுள்ளது.