ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

17 வைகாசி 2025 சனி 07:38 | பார்வைகள் : 254
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை முதல் முறையாக தொலைபேசியில் அழைத்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசினார்.
ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். நம் நாடு தலிபான் அரசை இதுவரை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், 2022 முதல் ஆப்கன் தலைநகர் காபூலில் நம் நாடு மீண்டும் துாதரகத்தை திறந்தது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு தலிபான் அரசு கண்டனம் தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் முதல் முறையாக, தொலைபேசியில் பேசினார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் உடனான பேச்சு சிறப்பாக அமைந்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கன் கண்டனம் தெரிவித்ததற்காக அவரிடம் நன்றி கூறினேன்.
பொய்யான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை பரப்பி இந்தியாவிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சிலர் மோதலை உருவாக்க முயற்சித்தனர். அத்தகைய முயற்சிகளை ஆப்கன் உறுதியாக நிராகரித்தது.
ஆப்கானிஸ்தான் மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும். இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.