கவர்னர் விவகாரம்; ஜனாதிபதியின் குறிப்புக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
16 வைகாசி 2025 வெள்ளி 08:10 | பார்வைகள் : 4052
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கவர்னர் விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வழியாக விளக்கம் கேட்டு உள்ள மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக கவர்னர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்த்து வைத்ததை மாற்றும் முயற்சி இது.
அதுமட்டுமல்லாமல் அரசமைப்பு சட்டத்தின் மகத்துவத்தையும், உச்சநீதிமன்றத்திற்கும் நேரடியாக சவால் விடுத்ததை போல் ஜனாதிபதியின் குறிப்பு அமைந்துள்ளது. கவர்னர்கள் செயல்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபணை இருக்க வேண்டும்? மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலமாக பாஜக ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?
பாஜக அல்லாத மாநில அரசுகளின் சட்டசபையை பாஜக அரசு முடக்குவதற்கு முயற்சி செய்கிறதா? ஜனாதிபதியின் குறிப்புகளில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசமைப்பு அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, பாஜக அல்லாத மாநில சட்டசபையை செயலிழக்க செய்யும் பாஜக அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan