இலங்கையில் மர்ம தீயில் 19 வயது யுவதி மரணம்

13 வைகாசி 2025 செவ்வாய் 13:36 | பார்வைகள் : 163
கொட்டாவை, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள தனது வீட்டிற்குள் எரிந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 19 வயது பெண்ணின் மர்மமான மரணம் குறித்து கொட்டாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் புடம்மினி துரஞ்சா என்ற இளம் யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அவரது உடல் முற்றிலுமாக கருகி, கூரை உட்பட வீட்டின் சில பகுதிகளும் தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவரின் தாயார் மற்றும் இரண்டு சகோதரர்கள் வெசாக் தோரணங்களைப் பார்ப்பதற்காக வீட்டிலிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை தீயணைப்பு படையின் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இருப்பினும், அவர்கள் வருவதற்குள் அந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
தீக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.