இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்

12 வைகாசி 2025 திங்கள் 09:23 | பார்வைகள் : 185
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தான் இந்திய ராணுவம் முதலில் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என ராணுவ டி.ஜி.எம்.ஓ., ராஜிவ் கய் கூறினார்.
பேட்டி
பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் இன்று 11ம் தேதி பேட்டி அளித்தனர்.
இலக்கு
ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) ராஜிவ் கய் கூறியதாவது: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் தெளிவான ராணுவ குறிக்கோளுடன் ஆபரேஷன் சிந்தூர் துவக்கப்பட்டது. ஒரு தேசமாக நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளை தாக்குவதை மட்டுமே இலக்கு என்று உறுதியாக கொண்டோம்.
அச்சம்
ஏராளமான பயங்கரவாத முகாம்கள் இருந்தாலும், நாம் தாக்குவோம் என்ற அச்சத்தில் பல பயங்கரவாத முகாம்கள் முன்னரே காலி செய்யப்பட்டு விட்டன என தெரியவந்தது. முதல் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் உளவுத்துறை தகவல்கள் மூலம் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதில் சில பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தது. சில பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தது.
பாக்., வீரர்கள் உயிரிழப்பு
முரிட்கேயில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் பயங்கரவாத அமைப்பின் முகாம் தான் அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கியது. இந்த முகாமில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப் மற்றும் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முதாசிர் அஹமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். குருத்வாரா உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் கிராமங்கள் சேதமடைந்தன.
அதன்பிறகே இந்திய ராணுவம், பாகிஸ்தானிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில், 35 முதல் 40 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் விமானப்படை முக்கியபங்கு வகித்தது. இந்திய கடற்படை முக்கிய வெடி மருந்துகளை வழங்கியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை அனுப்பி உள்ளோம்.
வீரமரணம்
இந்திய ராணுவ உட்கட்டமைப்பை குறிவைத்த பாக்., முயற்சி தோல்வியடைந்தது. இந்திய விமானங்கள் தாக்கப்பட்டதாக பாக்., கூறுவது பொய். சண்டையை நிறுத்த வேண்டும் என பாக்., அவசர கோரிக்கை வைத்தது. நாளை காலை12 மணிக்கு பாக்., ராணுவ இயக்குனரோடு பேச்சு நடக்க உள்ளது. எந்தவொரு அத்துமீறலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். பாக்,.குக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாக்., தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் இன்று தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.