காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; மத்திய அரசு நடவடிக்கைக்கு காங்கிரஸ் முதல்வர்கள் ஆதரவும், எதிர்ப்பும்!

27 சித்திரை 2025 ஞாயிறு 14:09 | பார்வைகள் : 143
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கைக்கு காங்கிரஸ் முதல்வர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
140 கோடி மக்கள்; உங்கள் பக்கம்
பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்க வேண்டும். இது சமரசத்துக்கான நேரம் கிடையாது. தக்க பதிலடி தரப்பட வேண்டும். 140 கோடி இந்தியர்கள் உங்களுடன் (பிரதமர் மோடி) உள்ளனர். நீங்கள் துர்க்கா மாதாவின் பக்தர். முன்னாள் பிரதமர் இந்திராவை நினைவு கூர்ந்து பாருங்கள். தருணம் கிடைத்தபோது, பாகிஸ்தானை மண்டியிட வைத்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
- ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர்
மக்களுக்கு அமைதி, பாதுகாப்பு போதும்
“நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பை நாங்கள் விரும்புகிறோம். பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் வகையில் மாநிலத்தில், பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசு மிகவும் கவனமாக இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். உளவுத்துறை தோல்வியால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. இப்போது, போர் நடவடிக்கை எடுத்தாலும், 26 பேரின் உயிரை மீண்டும் கொண்டு வர முடியுமா?
- சித்தராமையா, கர்நாடகா முதல்வர்
சிந்து நதி ஒப்பந்தம்; ஒரு போதும் வேண்டாம்
பஹல்காமில் தாக்குதல் சம்பவம் நடந்திருக்க கூடாது. அதற்காக, முதல்வர் என்ற முறையில் வருந்துகிறேன். பயங்கரவாத தாக்குதல் நடந்ததை, முதலில் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அது இந்தியாவால் செய்யப்பட்டது என நம் மீது பழி சுமத்தினர். இப்போது நடுநிலை விசாரணைக்கு தயார் என கூறுகின்றனர்.
நம்பகமற்ற பாகிஸ்தானின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தத்தை, ஜம்மு - காஷ்மீர் ஒரு போதும் ஆதரித்தது கிடையாது. அதனால், மத்திய அரசு முடிவை ஆதரிக்கிறோம் - ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர்