பிரபல இயக்குநர் நாகேந்திரன் காலமானார்…

26 சித்திரை 2025 சனி 12:09 | பார்வைகள் : 191
பிரபல இயக்குனரும் நடிகருமான, நாகேந்திரன் இன்று காலமானார். இவர் சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் நாகேந்திரன். கடந்த 2015-ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான ‘காவல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நாகேந்திரன். இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது. இதில் சமுத்திரக்கனி, புன்னகைப்பூ கீதா, நமோ நாராயணன், எம் எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, அஸ்வின் ராஜா, இமாம் அண்ணாச்சி ஆகியோர் நடித்திருந்தனர். தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நாகேந்திரன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது. நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப்போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது.
நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது. காலம் யாருக்கு என்ன செய்பக் காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்திச் செல்கிறது. . சகோதரனாய்.. நெருங்கிய நண்பனாய் பபணித்தவரை சட்டென்று இழந்துபோனதில் நெஞ்சம் கலங்குகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும்... இவ்வதிர்ச்சியைத் தாங்கும் பலத்தையும் இறைவன் தரட்டும். நாகேந்திரன் மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறட்டும்” என தெரிவித்துள்ளார்.