Paristamil Navigation Paristamil advert login

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

22 சித்திரை 2025 செவ்வாய் 11:59 | பார்வைகள் : 263


அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், டில்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி, அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

வரி போர்

இந்தியா உட்பட, 60 நாடுகளுக்கு பரஸ்பர வரி விகிதங்களை அவர் சமீபத்தில் வெளியிட்டார். அதற்கடுத்த சில நாட்களில், 90 நாட்களுக்கு இதை நிறுத்தி வைப்பதாக அவர் கூறினார்.

இந்த வரி போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நான்கு நாள் இந்திய பயணமாக நேற்று வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா, குழந்தைகள் மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் வந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, அவருடைய இல்லத்தில் வான்ஸ் நேற்று மாலை சந்தித்து பேசினார். தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். அவர்களுடன், மோடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு பேச்சில், மோடி மற்றும் வான்ஸ் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பு அதிகாரிகள் குழுவினரும் பங்கேற்றனர். இந்த பேச்சின்போது, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் வான்ஸ் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.

பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு, இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எரிசக்தி, ராணுவம், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில், இரு தரப்பு ஒத்துழைப்புகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு இரு தலைவர்களும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

ஒத்துழைப்பு

பரஸ்பரம் நலன் சார்ந்த, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இருவரும் பேசினர். இந்த விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைத்து செயல்பட உறுதி ஏற்றனர்.

எரிசக்தி, தொழில்நுட்பம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தாண்டு இறுதியில் அவருடைய இந்திய பயணத்தை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக் ஷர்தாம் கோவிலில் வழிபாடு

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன், டில்லியில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அக் ஷர்தாம் கோவிலுக்கு நேற்று சென்று வழிபட்டார்.அக் ஷர்தாம் கோவிலில் உள்ள விருந்தினர் புத்தகத்தில், 'மிகவும் நேர்த்தியாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. என் குழந்தைகள் இதை மிகவும் ரசித்தனர்' என, வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.மரத்திலான யானை, அக் ஷர்தாம் கோவிலின் மாதிரி, குழந்தைகளுக்கான புத்தகங்களை, கோவில் நிர்வாகம் பரிசாக அளித்தது.

இந்திய உடையில் குழந்தைகள்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மனைவி உஷா வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். உஷாவின் பெற்றோர், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்துவரான வான்ஸ் மற்றும் ஹிந்துவான உஷா, யேல் சட்ட பல்கலையில் படித்தபோது பழகினர். கடந்த 2014ல் இவர்களுக்கு திருமணமானது.அமெரிக்க துணை அதிபராக வான்ஸ் பதவியேற்ற பின், தன் முதல் இந்திய பயணத்துக்கு குடும்பத்தாருடன் வந்துள்ளார். டில்லியில் அவர்களை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.வான்ஸ் மற்றும் உஷாவின் மகன்கள் இவான், 7, விவேக், 4 மற்றும் மகள் மிராபெல், 3, பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்தனர். மகன்கள் பைஜாமா, குர்தா அணிந்திருந்தனர். மிராபெல், அனார்கலி உடை அணிந்திருந்தார். இது, அனைவரையும் கவர்ந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்