துணை பொது செயலருடன் வைகோ மகன்... சமரசம் : ம.தி.மு.க.,வில் அமலுக்கு வந்த போர் நிறுத்தம்

21 சித்திரை 2025 திங்கள் 12:58 | பார்வைகள் : 287
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுடன் மோதல் ஏற்பட்டதால், கட்சியின் பொதுச்செயலர் வைகோவின் மகன் மற்றும் கட்சியின் முதன்மை செயலரான துரை வைகோ, தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், ம.தி.மு.க.,வில் அடுத்து என்ன நடக்கும் என்ற நிலை உருவான நிலையில், நேற்று இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ம.தி.மு.க.,வில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது, கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு, கட்சியின் துணை பொதுச்செயலராக உள்ள மல்லை சத்யா உடன் திடீரென மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. இரு தினங்களுக்கு முன், துரை வைகோ வெளிப்படையாக, மல்லை சத்யாவை விமர்சித்தார்.
கட்சியில் பிளவு
அதைத் தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து நீக்கக்கோரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால், கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாக, கட்சியினர் யாரும் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று வைகோ உத்தரவிட்டார். அதிருப்தி அடைந்த துரை வைகோ, தன் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இது, ம.தி.மு.க.,வில் பதற்றத்தை அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில், ம.தி.மு.க., நிர்வாக குழு கூட்டம், கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், துரை வைகோவின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
மல்லை சத்யாவும் கட்சி உத்தரவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, துரை வைகோ, மல்லை சத்யா ஆகியோரை, வைகோ அழைத்து பேசி சமாதானப்படுத்தினார்.
அவர் கூறியதை ஏற்று, தன் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக துரை வைகோ அறிவித்தார். கட்சிக்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இது, கட்சியினருக்கு நிம்மதியை தந்துள்ளது.
கருத்து வேறுபாடு
கூட்டம் முடிந்த பிறகு, வைகோ அளித்த பேட்டி:
மல்லை சத்யா, துரை வைகோ இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பதிவுகள் போட்டனர். அதை நான் குறை சொல்லவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இருவரும் மனம் விட்டு பேசினர். 'இனிமேல் இப்படிப்பட்ட பதிவுகள் வராது; அதற்கு நான் ஒரு போதும் இடம் கொடுப்பதில்லை.
'இதை துரை ஏற்க வேண்டும். கட்சி தலைமைக்கும், முதன்மை செயலருக்கும் உறுதுணையாக செயல்படுவேன்' என்று மல்லை சத்யா தெரிவித்தார்.
அதை துரை ஏற்று, 'ஒற்றுமையாக இருந்து கட்சியை வலுப்படுத்துவோம். நடந்தவை நடந்து முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்' என்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, கரம் குலுக்கி, இணைந்து பணியாற்றுவோம் என, நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். பிரச்னை முடிந்தது.
இப்பிரச்னையை வைத்து, தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுத்த சிலர் நினைத்து ஏமாந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருத்தம் தெரிவித்தார் மல்லை சத்யா
துரை வைகோ வெளிப்படைதுரை வைகோ அளித்த பேட்டி:எல்லா ஜனநாயக இயக்கங்களிலும், மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். சில நேரங்களில், கட்சி நிர்வாகிகள் மத்தியில், குழப்பம், கருத்து வேறுபாடு வருவது இயற்கை. எல்லா இயக்கத்திலும் அது உண்டு. சமூக வலைதளங்களில் சில பதிவுகள் வந்தன. அதன் வாயிலாக கட்சிக்கும், தலைமைக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழலில், இந்த நிகழ்வு நடந்தது. கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது.
மல்லை சத்யாவை பொறுத்தவரை, நான் வைத்த குற்றச்சாட்டுக்கு வருத்தம் தெரிவித்தார். கட்சிக்கும், தலைவருக்கும், எனக்கும் உறுதுணையாக இருப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை ஏற்று, முதன்மை செயலர் பதவியில் தொடர்வதாக கூறியுள்ளேன். அவரது அரசியல் வாழ்க்கைக்கு, நான் உறுதுணையாக இருப்பேன். மொத்தத்தில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற குழப்பங்கள் நடக்க கூடாது. இது, கட்சிக்கு நல்லதல்ல; தலைவருக்கும் நல்லதல்ல என்று நான் முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
காற்று கூட மனிதனை கீழே தள்ளிவிடும்
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா கூறியதாவது:என் அரசியல் முகவரியாக இருப்பவர் வைகோ. அவர் சொன்னது தான் இங்கு நடந்தது. துரை தன் பதவியில் நீடிக்க வேண்டும். என் நடவடிக்கைகள் காயப்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அவர் தொடர்ந்து கட்சி பணியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தேன். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். அவருடன் இணைந்து பணியாற்றுவேன்.
மனிதன் பலவீனமானவன். காற்று கூட மனிதனை கீழே தள்ளிவிடும். ஒரு கல் கூட இடறி விடும். அலை கூட தடம் மாற்றி விடும். ஆனால், கல்லை உருவாக்கும் மலையை உடைத்தெறியும் சக்தியும், காற்று, அலையில் இருந்து மின்சாரம் எடுக்கும் வல்லமையும் பெற்றவர்கள் மனிதர்கள். எனவே, இருவரும் இணைந்து, வைகோ கண்ட கனவுகள் வெற்றி பெற பணியாற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னரை நீக்க ஆர்ப்பாட்டம்' நிர்வாக குழுவில் தீர்மானம்
'கவர்னர் பதவியில் இருந்து ரவியை நீக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், வரும் 26ம் தேதி, ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்தில், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றின் விபரம்:
* இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், கவர்னர் பொறுப்பை, அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து, கவர்னர் ரவிக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, கவர்னர் பதவியில் நீடிக்கும் தகுதியை ரவி இழந்து விட்டார். அவரை கவர்னர் பதவியில் இருந்து, ஜனாதிபதி நீக்க வேண்டும்
* வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, ஜனநாயக வழியில் போராடி, அதை முறியடிக்க வேண்டும்
* தமிழகத்தில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்
* தமிழக கவர்னரை நீக்கக் கோரியும், வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், ம.தி.மு.க., சார்பில் வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.