மத்திய கிழக்கிற்காக ஒளிரும் ஈஃபிள்!!

16 சித்திரை 2025 புதன் 08:59 | பார்வைகள் : 2284
மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்தவேண்டும் எனும் கோரிக்கையுடன் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் இன்று புதன்கிழமை இரவு விசேடமாக ஒளிரவிடப்பட உள்ளன.
'அமைதி' என பொருள் தரும் "Paix" எனும் வார்த்தையை மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட உள்ளதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 16, இன்று புதன்கிழமை இரவு 9 மணிக்கு இதனை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் கொல்லப்படும் பொதுமக்களுக்கு ஆதரவாக பரிசில் இன்று புதன்கிழமை பிற்பகல் மாநாடு ஒன்று இடம்பெறுகிறது.
அதை அடுத்து "Les Guerrières de la Paix" எனும் அமைப்பின் ஏற்பாட்டில் ஈஃபிள் கோபுரத்தில் இது காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரிஸ் மனிதாபிமானத்துக்கு பெயர்போன நகரமாகும். அமைதியை விரும்பும் நகரம் ஒன்று முதலில் குரல் கொடுக்க விரும்புகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.