Paristamil Navigation Paristamil advert login

மனம் மயங்கும் மாலைவேளை

மனம் மயங்கும் மாலைவேளை

10 பங்குனி 2025 திங்கள் 13:36 | பார்வைகள் : 4990


அழகான நிறத்தோடு அந்தி சாயும் வேளை
ஆதவனும் அமரனாகி மெல்ல மறையும் வேளை
அவனியாவும் அயனைப் போற்றும் வேளை
ஆம்பல் அரும்பு அமைதியாக மலரும் வேளை

ஆற்று வெள்ளம் குளிர்ச்சியாக மாறும்வேளை
ஆனந்தம் மனதில் உருவாகும் அந்த வேளை
உயிரினங்கள் அமைதியை நாடிடும் வேளை
உடல்கள் சலித்து ஓய்வு பெற துடிக்கும் வேளை

உறவுகளைப் புதுமையாகக் காணும் வேளை
உணர்வுகள் உள்ளே ஊமையாக புணரும் வேளை
தாயுடன் சேய்கள் வந்து ஒன்று சேரும் வேளை
மண்ணினங்கள் மதி மயங்கி மகிழும்வேளை

மெல்லிடையாள் காதலுடன் கண்மூடி கனவோடு
காத்திருக்கும் அந்த இனிமையான வேளை
மாலை மயங்கும் வேளை என அறிவாய் மானிடனே