Saint-Martin-Boulogne : காவல்துறையினரால் சுடப்பட்ட ஆயுததாரி!!

1 பங்குனி 2025 சனி 16:40 | பார்வைகள் : 2855
கத்தி ஒன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை Saint-Martin-Boulogne (Pas-de-Calais) நகரில் இடம்பெற்றுள்ளது.
மார்ச் 1, இன்று சனிக்கிழமை அதிகாலை 4.15 மணி அளவில் அங்குள்ள rue Marlborough வீதியில் நபர் ஒருவர் கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைய முற்பட்டுள்ளார். அதை அடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
காவல்துறையினரை குறித்த நபர் மரியாதை குறைவாக திட்டி, அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார். காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் குறித்த நபர் அதனை செவிமடுக்கவில்லை.
பின்னர் காவல்துறையினர் தங்களது LBD (இறப்பர் குண்டுகளைக் கொண்ட துப்பாக்கி) துப்பாக்கியினை எடுக்க, ஆயுததாரி அங்கிருந்து கத்தியுடன் தப்பி ஓடியுள்ளார்.
அதை அடுத்து, குறித்த நபர் தப்பி ஓட முற்பட்டபோது, காவல்துறையினரால் சுடப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.