Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தமிழகத்திற்கு துப்பாக்கி சப்ளை பீஹார் மாநில கும்பலுக்கு வலை

தமிழகத்திற்கு துப்பாக்கி சப்ளை பீஹார் மாநில கும்பலுக்கு வலை

6 தை 2025 திங்கள் 03:27 | பார்வைகள் : 8876


தமிழகத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் 'மெத் ஆம்பெட்டமைன்' உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு, துப்பாக்கி சப்ளை செய்யும், பீஹார் மாநில கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில், கொலை, ஆள் கடத்தல் என, கொடூர செயலில் ஈடுபடும், 'ஏ பிளஸ்' ரவுடிகளிடம் ஏற்கனவே கள்ளத்துப்பாக்கிகள் உள்ளன. தற்போது, சிறிய அளவில் வளர்ந்து வரும் ரவுடிகளிடமும், துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது.

இருவர் கைது

சில தினங்களுக்கு முன், தனிப்படை போலீசார், சென்னை அடுத்த சிட்லபாக்கத்தில் பதுங்கி இருந்த, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த, ராஜா,42, சத்தியசீலன்,36 என்ற இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள் ஐந்தும், 79 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் விசாரணையில், தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம், கள்ளத்துப்பாக்கிகள் புழக்கம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:

பீஹார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில், குடிசை தொழில் போல, கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலை செயல்படுகிறது. அந்த ஊரில், துப்பாக்கியை, 'கட்டா' என, அழைக்கின்றனர்.

அங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் தயாரித்தது போல முத்திரையிடுகின்றனர். மேற்கு வங்கத்திலும், கள்ளத் துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது.

பீஹார் மாநில கும்பல், தமிழகத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, துப்பாக்கி சப்ளை செய்கிறது. இதற்கு பல நிலைகளில், இடைத்தரகர்கள் உள்ளனர்.

ரவுடிக்கு தொடர்பு

முங்கர் மாவட்டத்தில் இருந்து, பிஸ்டல், ரிவால்வர் அதிகம் கடத்தி வரப்படுகிறது. ஒரு துப்பாக்கி, 25,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தமிழகத்திற்கு பீஹார் மாநிலத்தில் இருந்து, துப்பாக்கியை கடத்தி வருவதில், துாத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஒருவர் முக்கிய பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது.

அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். பீஹார் மாநில கும்பல் தமிழகம் வந்து சென்றுள்ளது. அந்த கும்பலையும் தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்