இலவசங்கள் கொடுப்பதற்கு மட்டும் அரசுகளுக்கு பணம் இருக்கிறதா?
8 தை 2025 புதன் 03:24 | பார்வைகள் : 5119
எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு இலவசங்களை கொடுக்க அரசுகளுக்கு பணம் இருக்கிறது; நீதிபதிகளுக்கு ஊதியம் மற்றும் பென்ஷன் வழங்கும்போது மட்டும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறுகின்றனர்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளுக்கான ஊதியம், பென்ஷன் போன்றவை தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சார்பில், 2015ல் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நடந்தது.
அப்போது, ''நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை முடிவு செய்யும்போது நிதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்,'' என, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி தெரிவித்தபோது நீதிபதிகள் குறுக்கிட்டனர்.
எந்த வேலையும் செய்யாமல் இருக்கக்கூடிய நபர்களுக்கு இலவசத்தை வழங்குவதற்கு அரசுகளிடம் பணம் இருக்கிறது. குறிப்பாக, மஹராஷ்டிரா தேர்தலின் போது பெண்களுக்கு நேரடியாக நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. டில்லி சட்டசபை தேர்தலுக்காக, 2,500 ரூபாய் வரை மாதம் தோறும் வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கொடுத்துள்ளன. உங்களுக்கு இதற்கெல்லாம் பணம் இருக்கிறது; ஆனால் நீதிபதிகளுக்கானஊதியம், பென்ஷன் போன்றவை குறித்து பேசினால் நிதி நெருக்கடி குறித்து கூறுகிறீர்கள்' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, ''இலவசங்கள் வழங்கும் நடைமுறைகளை அறிவிக்கும்போது நிதி சுமைகளையும் அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், நீதித்துறை மேலும் சிறப்புடன் செயல்படுவதற்கு நீதிபதிகளுக்கு நல்ல ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பதை, தன் தரப்பு வாதமாக வைத்தார். விசாரணை இன்றும் தொடர்கிறது.

























Bons Plans
Annuaire
Scan