அமேசான் காட்டைவிட்டு கூட்டமாக வெளியே வந்த ஆதிவாசிகள் - இரண்டு பேர் பலி, இருவர் மாயம்

4 புரட்டாசி 2024 புதன் 14:50 | பார்வைகள் : 8515
அமேசான் காட்டின் உள்பகுதியில் வாழும் Mashco Piro என அழைக்கப்படும், அதிகம் வெளியில் தலைகாட்டாத ஆதிவாசிகள் கூட்டத்தைச் சேர்ந்த சிலர், திடீரென காட்டைவிட்டு வெளியில் வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அவர்கள் வெளியே வரவில்லை. மரம் வெட்டுவதற்காக காடுகளை அழிப்போர், மரங்களை வெட்டி வெட்டி, அந்த ஆதிவாசிகளின் வீடுவரை சென்றுவிட்டார்கள் என்பது அதன் பொருள் என்று கூறியிருந்தார்கள் சமூக ஆர்வலர்கள்.
தாங்கள் வாழும் இடத்துக்கே வெளியாட்கள் வந்துவிட்டதால் கோபமடைந்துள்ள அந்த ஆதிவாசிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே, தங்கள் வழக்கத்துக்கு மாறாக தாங்கள் வாழும் அடர்ந்த காட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆம், கடந்த வியாழனன்று, பெரு நாட்டிலுள்ள Madre de Dios என்னும் பகுதியில், அமேசான் காடுகளில் மரம் வெட்டச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் அந்த ஆதிவாசிகள்.
வில், அம்பு கொண்டு அவர்கள் தாக்கியதில், மரம் வெட்டச் சென்ற இரண்டுபேர் உயிரிழந்துள்ளார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.
அத்துடன், மரம் வெட்டச் சென்றவர்களில் மேலும் இருவரைக் காணவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த ஆதிவாசிகள், தங்கள் வீட்டுக்குள் நுழைந்த அந்நியர்களைத் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் போலும்!
பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, பெரு நாட்டு அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
பாதுகாக்கப்படவேண்டிய அந்த பூர்வக்குடியினரை பாதுகாப்பதற்காக, அந்த பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025