இலங்கையில் சட்டவிரோத MTFE பிரமிட் திட்டத்திற்கு மத்திய வங்கியால் தடை

24 ஆவணி 2023 வியாழன் 06:02 | பார்வைகள் : 6979
MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய 04 MTFE நிறுவனங்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, பொதுமக்களுக்கு பகிரங்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி, இவ்வாறான பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்குவது, வழங்குவது, ஊக்குவிப்பது, விளம்பரம் செய்வது, பராமரிப்பது, நிதியளிப்பது அல்லது நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்களுடன் சில உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளதாக சில நபர்கள் முன்வைக்கும் கூற்றுக்களை இலங்கை மத்திய வங்கி நிராகரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரமிட் திட்டங்களுக்கான குற்றவியல் நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்பு தடை செய்யப்பட்ட Best Life, Fast 3 Cycle மற்றும் OnmaxDT ஆகிய பிரமிட் திட்டங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.