Paristamil Navigation Paristamil advert login

குஜராத்தில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!

குஜராத்தில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!

21 வைகாசி 2024 செவ்வாய் 03:00 | பார்வைகள் : 1094


நாடு முழுதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற தயாராக இருந்த ஐ.எஸ்., அமைப்பை சேர்ந்த நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது

செய்தனர். அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்; சென்னை வழியாக ஆமதாபாத் வந்தனர் என்பது விசாரணையில் தெரிந்தது.ஆமதாபாத் விமான நிலையத்துக்கு கடந்த 12ம் தேதி, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

சோதனையில் அது புரளி என தெரிந்தது. இருப்பினும், ஆமதாபாத் உட்பட குஜராத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பேர் ஆமதாபாத் வரவிருப்பதாக, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

விமான, ரயில் பயணியர் கடுமையாக சோதிக்கப்பட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஆமதாபாத் வந்த விமானத்தில் பயணித்த நான்கு பேர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்கள் ஒரே நம்பர் கொண்ட டிக்கெட்டில் வந்தனர் என உறுதி செய்யப்பட்டது.
முஹமது நுஸ்ரத், 33, முஹமது பரிஸ், 35, முஹமது நப்ரான், 27, முஹமது ரஸ்தீன், 43, ஆகிய நால்வரையும் தனித்தனி அறையில் அடைத்து விசாரித்தனர். நால்வரும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், பாகிஸ்தானில் உள்ள அபு பக்கர் என்ற பயங்கரவாதியின் கட்டளைப்படி சில வேலைகள் செய்து முடிக்க ஆமதாபாத் வந்ததும் தெரிந்தது.

இது குறித்து குஜராத் டி.ஜி.பி., விகாஸ் சஹாய் கூறியதாவது: நால்வரும் தமிழ் பேசுகின்றனர். மற்ற மொழிகள் தெரியவில்லை. மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விசாரித்தோம். ஆமதாபாதில் தங்கி குஜராத்திலும் வேறு பகுதிகளிலும் நாசவேலையில் ஈடுபட தயாராக வந்திருந்தனர் என்பது தெரிய வந்தது. குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை அழிக்கும் திட்டம் வைத்திருந்தனர். இரண்டு மொபைல் போன்களை கைப்பற்றினோம்.

பாகிஸ்தானில் இருக்கும் அபு பக்கருடன் அவர்கள் உரையாடிய தகவல்கள் கிடைத்தன. அதன்படி, ஆமதாபாதில் உள்ள நானா சிலோடா நகரில் மறைத்து வைத்திருந்த 3 பாகிஸ்தான் தயாரிப்பு பிஸ்டல்கள், 20 தோட்டாக்கள், சில வரைபடங்கள், ஐ.எஸ்., அமைப்பின் கொடிகள், வேறு சில ஆதாரங்களை் கைப்பற்றினோம். பிஸ்டல் மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் கூட்டாட்சி பழங்குடியினரின் முத்திரை இருந்தது. அபு பக்கர் அனுப்பிய ஆயுதங்களை வைத்து நாசவேலைகளை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இலங்கையில், 2019ல் ஈஸ்டர் பண்டிகையின் போது சர்ச்சில் குண்டு வெடித்து பலர் இரந்தனர். அதையடுத்து தேசிய தவுஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அதில் உறுப்பினர்களாக இருந்த இவர்கள், அபு பக்கரை சந்தித்து கடந்த பிப்ரவரியில் ஐ.எஸ்., அமைப்பில் இணைந்தனர் என்பதை கண்டுபிடித்தோம்.
நாசவேலைகளை செய்ல்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டால், தற்கொலைப்படையாக மாறி தாக்குதல் நடத்தவும் தயாராக இருந்தனர். இதற்காக, அபு பக்கர் இலங்கை பணமதிப்பில் 4 லட்சம் ரூபாயை அட்வான்சாக அனுப்பி வைத்துள்ளார். நால்வரில், நுஸ்ரத் மட்டும் பாகிஸ்தான் சென்று வருவதற்கான விசா வைத்திருந்தார். நால்வரையும் கைது செய்துள்ளோம். பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு டி.ஜி.பி., கூறினார்.


இலங்கை பயங்கரவாதிகள் இந்தியாவை குறிவைப்பது ஏன்?

உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:இலங்கையில் 20 பயங்கரவாத இயக்கங்கள் இருந்தன. பெரும்பாலானவை ஒரு மதத்தை சார்ந்தவை என்பதால், உலக அளவில் இயங்கும் பிற பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பில் இருந்தன. அதனால், பல நாடுகளின் பயங்கரவாத இயக்க தலைவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றி வந்தன. கொழும்பு சர்ச்சில் 2019 ஏப்ரல் 21ல் நடந்த ஈஸ்டர் நிகழ்ச்சியில் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் 218 பேர் இறந்தனர். இதையடுத்து, 20 அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. அவற்றின் உறுப்பினர்கள் வேறு நாடுகளுக்கு சென்று நாசவேலை செய்து வருகின்றனர்.
அப்படி இந்தியாவுக்குள் ஊடுருவிய பலரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. ஆனாலும், சமீப காலமாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., அமைப்பு, இலங்கையில் தலைமறைவாக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஏவி விடுவது அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, லோக்சபா தேர்தல் முடிவதற்குள் பெரிய அசம்பாவிதத்தை நிகழ்த்தி காட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படும் ஐ.எஸ்., அமைப்பு, இன்னும் சில மாதங்களில் இலங்கையில் நடக்க உள்ள தேர்தலை ஒட்டி அங்கும் சம்பவங்களை நிகழ்த்தும் முனைப்போடு உள்ளது.

அந்த அமைப்பின் ஒரு தரப்பினர் தான், ஆமதாபாதில் சிக்கியவர்கள். அவர்களிடம் பிடிபட்ட கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை. துப்பாக்கிகள் சீனாவின் நோரின்கோ 54 ரகத்தை சேர்ந்தவை. வெடி மருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுவும் பாகிஸ்தானை சேர்ந்தது.
இவ்வளவு விஷயங்கள் இலங்கையை மையமாக வைத்து நடந்து கொண்டிருக்க, கடந்த ஆண்டு ஜூலையில் அங்கு ஐந்து இயக்கங்கள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டது. அதன்பின், இலங்கையில் பயங்கரவாத குழுவினர் துணிச்சலாக செயல்பட துவங்கி உள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்