இலங்கையில் கிராம உத்தியோகத்தர் வேலைநிறுத்தம் - சடலத்தை அடக்கம் செய்ய முடியாத அவலம்

17 வைகாசி 2024 வெள்ளி 06:42 | பார்வைகள் : 6411
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்களினால் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
கிராம உத்தியோகத்தர்களின் பணிபகிஷ்கரிப்பு காரணமாக வீடுகளில் ஏற்படும் இயற்கை மரணங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறானதொரு சம்பவமொன்று பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்தப் பகுதியில் 72 வயதுடைய முதியவரொருவர் நேற்று (15) இரவு வீட்டில் உயிரிழந்த நிலையில், கிராம உத்தியோகத்தரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இறுதி கிரியைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், சடலம் தொடர்ந்தும் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டியது அவசியமாக இருப்பினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களே பாதிக்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.