■ Nouvelle-Calédonie : ஜொந்தாம் வீரர் உள்ளிட்ட நால்வர் பலி - அவசரநிலை பிரகடனம்!

15 வைகாசி 2024 புதன் 15:28 | பார்வைகள் : 8223
சற்று முன்னர் Nouvelle-Calédonie தீவுக்கு ’அவசரநிலை பிரகடனத்தை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
கடந்த 72 மணிநேரங்களுக்கும் மேலாக அங்கு பலத்த வன்முறை பதிவாகி வருகிறது. தீவின் தலைநகர் Noumea இல் உள்ள கடைகள் சூறையாடப்பட்டும், வீதிகளில் நின்ற மகிழுந்துகள் எரியூட்டப்பட்டும் வன்முறைகள் பதிவாகின. இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை ஜொந்தாம் வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த வீரர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய இளம் ஜொந்தாம் வீரர் Melun (Seine-et-Marne) நகரைச் சேர்ந்தவர் எனவும், செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று பிற்பகல் 3.50 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகள் மூன்று நாட்களாக தொடர்வதால், அங்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் ‘அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக’ ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட ஜொந்தாம் வீரருக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin அஞ்சலி செலுத்தியுள்ளார்.