இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம்!

7 சித்திரை 2024 ஞாயிறு 15:41 | பார்வைகள் : 5178
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தினால், தமது பிரஜைகளுக்கு வெளியிட்டிருந்த இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகிய விடயங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தகவல்களை பிரித்தானியா மாற்றியுள்ளது.
அதற்கமைய உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து முந்தைய ஆலோசனையில் காணப்பட்ட தகவல்கள் இந்த திருத்தப்பட்ட பயண ஆலோசனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை போன்ற சுகாதார சேவைகளில் உள்ள சவால்களும் நீக்கப்பட்டுள்ளன.
ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 53,928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.