Nanterre : ஏழு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் - மகிழுந்துக்குள் இருந்து சடலமாக மீட்பு!!
![Nanterre : ஏழு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் - மகிழுந்துக்குள் இருந்து சடலமாக மீட்பு!!](ptmin/uploads/news/France_rajeevan_20240402_152831.jpg)
2 சித்திரை 2024 செவ்வாய் 11:53 | பார்வைகள் : 3316
மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை காலை மகிழுந்து ஒன்றின் பின்பக்க பெட்டிக்குள் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்க்கப்பட்டது. அது கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போயிருந்த பெண் ஒருவரது சடலம் அது என தெரிவிக்கப்படுகிறது.
Nanterre (Hauts-de-Seine) நகரில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்று கடந்த பெப்ரவரி மாதத்தில் அகற்றப்பட்டது. மகிழுந்தின் உரிமையாளர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மகிழுந்தை கட்டாயமாக அப்புறப்படுத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
பின்னர் அந்த மகிழுந்தை SNCDR எனும் நிறுவனம் 'அழிப்பதற்கு' எடுத்துச் சென்றிருந்தது. அதன்போதே மகிழுந்துக்குள் சடலம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.
பெண் ஒருவரது சடலம் மிகவும் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டதும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சடலத்தின் உடற்பகுதிகள் தடயவியல் குழுவுக்கு அனுப்பப்பட்டு, சடலம் அடையாளம் காணப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் (2017) காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.