பெண் அணிந்திருந்த உடையில் இருந்த வாசகத்தால் சர்ச்சை
![பெண் அணிந்திருந்த உடையில் இருந்த வாசகத்தால் சர்ச்சை](ptmin/uploads/news/World_renu_24-65dcd58dc395c.jpg)
27 மாசி 2024 செவ்வாய் 09:20 | பார்வைகள் : 3263
பாகிஸ்தானில் பெண் ஒருவர் அணிந்திருந்த உடை மதத்திற்கு எதிரானது என குறிப்பிட்டு அவரது தலையை துண்டிக்கக் கோரி ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணின் உடையில் அரேபிய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகம் குர்ஆனில் இருக்கும் வசனங்கள் என தவறாக கருதிய அந்த மக்கள் கூட்டம் மதத்தை பழித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
லாகூரில் உள்ள அச்ரா மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகத்தில் வெளியான காணொளி ஒன்றில், அந்த பெண் உணவகத்தில் அமர்ந்திருப்பதையும், முகத்தை மறைக்க முயற்சிப்பதையும், ஒரு ஆண் அவளை நோக்கி கத்துவதைப் போலவும் காணலாம்.
குறித்த பெண்ணுக்கு அருகாமையில் இருக்கும் நபர், அவரது நண்பராக இருக்கலாம், அந்த நபர் தமது அலைபேசியில் யாரையோ தொடர்புகொள்ளும் அவசரத்தில் காணப்படுகிறார்.
தொடர்புடைய பெண் வண்ணமயமான அரேபிய எழுத்துக்களுடன் வெள்ளை நிற உடை அணிந்திருந்தார். அவரது உடையில் 'ஹல்வா' என்ற அரபு வார்த்தை இருந்தது, இது ஆங்கிலத்தில் 'இனிப்பு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்துவந்த பொலிசார், திரண்டிருந்த மக்களிடம் சமாதானம் பேசியுள்ளனர். உள்ளூர் செய்திகளின் வெளியான தகவலின்படி, உணவகத்திற்கு வெளியே 100 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
கூட்டத்தில் இருந்த சிலர் அந்த பெண்ணின் தலையை துண்டித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனிடையே, பொலிசார் தொடர்புடைய பெண்ணை பத்திரமாக மீட்டு, அந்த கூட்டத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
தொடர்ந்து, அந்த உடையில் எழுதப்பட்டிருந்த அரேபிய வாசகம் குர்ஆன் வசனங்கள் அல்ல என பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.